பாஜகவை தேசிய அளவில் எதிர்ப்பதற்கு திமுக, தவெக ஓரணியில் இணைய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன் பேச்சு குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது. அதாவது, தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதால் மட்டுமே கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்று பொருள் ஆகாது. திமுகவுடனான எண்களின் நட்பு தொடர்கிறது என திருமாவளவன் பேசி இருந்தார். அவருடைய இந்த கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் நேற்றைய தினம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாக பதில் அளித்து இருந்தார் வைகோ. இது விசிகவினர் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து அவரின் கிண்டலுக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், வைகோவின் பரிந்துரைக்கு நன்றி. எனக்கு நோபல் பரிசு கிடைத்தால், அவருக்கு நன்றி கூறுகிறேன் என பதிலடி கொடுத்திருந்தார். இதுவும் சோஷியல் மீடியாவில் பெரிதும் வைரலானது.
இந்நிலையில் திருமாவளவன் சம்பந்தமாக தெரிவித்த கருத்து குறித்து வைகோ தற்போது புதிய விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், யார் மேலயும் எனக்கு வருத்தம் கிடையாது. என்னிடம் தவெக அமைச்சரவையிலும் பங்கேற்கிறோம். திமுக கூட்டணியிலும் தொடர்கிறோம் என திருமாவளவன் சொன்னதாக கேள்வி கேட்டார்கள். அதோடு திமுக, தவெக அகில இந்திய அளவில் ஓரணிக்கு வர வேண்டும் என்றும் அவர் சொன்னார்கள் என்ற செய்தி எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
வட துருவமும், தென் துருவமும் சேர முடியுமா? எப்படி திமுக கூட்டணியில் இருந்து தவெக அமைச்சரவையில் பங்கெடுக்க முடியும். அப்படின்னு நான் நினைச்சதால, அதிர்ச்சியில் இந்த மாதிரி கருத்தை சொன்னதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொன்னேன். அவரை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது என விளக்கம் அளித்தார் வைகோ. அதோடு திருமாவளவன் அரசியலில் வளர வேண்டும் என என்னால் முடிந்த அத்தனை விதமான நிகழ்வுகளிலும் நான் உதவி இருக்கிறேன். அவர் பெரிய தலைவராக வேண்டுமென 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊக்கமளித்து தான் வந்திருக்கிறேன்.
என்னால் இயன்ற அளவுக்கு பக்க பலமாக நின்று இருக்கிறேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன். எந்த கோபமும், வருத்தமும் கிடையாது என்றார் வைகோ. மேலும் நான் சொன்ன சொற்கள் அவர் மனம் புண்பட்டு இருக்குமென்றால், அந்த சொற்களை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனக்கு இம்மியளவும் கசப்பு திருமாவளவன் மீது கிடையாது. அவர் கருத்து சொல்வது ஜனநாயக உரிமை. அதற்கு ரியாக்ட் பண்ணியது கஷ்டப்படுத்தி இருந்தால் என்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
இதற்கிடையில் நேற்றைய தினம் திமுக, தவெக தேசிய அளவில் இணைந்து செயல்பட வேண்டுமென வைகோ கருத்து ஒன்றினை தெரிவித்து இருந்தார். அதாவது பாஜகவை எதிர்க்கும் திமுக, தவெக இரண்டும் தேசிய அளவில் மதவாத சக்தியை எதிர்ப்பதற்கும், அவர்களின் சதி அரசியலை முறியடிப்பதற்கும் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும். தேசிய அளவிலான என்னுடைய பார்வை இது. இதனை தமிழ்நாடு அரசியல்வாதிகள், ஊடகவியாளர்களால் புரிந்துக்கொள்ள முடியாது என தெரிவித்து இருந்தார்.
அதாவது பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் திமுக, தவெக இரண்டும் இடம்பெற வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து இந்த கருத்தினை திருமாவளவன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவரின் இந்த பேச்சை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது என வைகோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
