முந்தைய திமுக ஆட்சியில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய வைகோ, தற்போதைய ஊழலற்ற விஜய் அரசுக்கு மதிமுகவின் முழு ஆதரவை எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதியதொரு கூட்டணிக் கணக்குகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சராகத் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றது முதல், தற்போதைய அரசுக்கும் திமுக-விற்கும் இடையே அரசியல் ரீதியான மோதல்கள் நீடித்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், திமுக கூட்டணியின் நீண்டகால தோழமைக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK), அக்கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறி, முதல்வர் விஜய்யின் த.வெ.க அரசுக்குத் தனது அசைக்க முடியாத ஆதரவை அறிவித்துள்ளது.இது குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் திமுக தலைமை மற்றும் முந்தைய திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக-வினர் அடிக்கும் குட்டிக்கரணங்கள் பலிக்காது! – வைகோ
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
