தமிழ் மண்ணுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் 60 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து, ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்த ஒரு தலைவரின் தியாகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று துரை வைகோ கூறினார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, "சமத்துவ நடைபயணம்" என்ற பெயரில் ஜனவரி 2, 2026 அன்று திருச்சியில் தொடங்கினார். நடைபயணத்தின் நிறைவை எட்டியுள்ள வைக்கோ இன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து, உத்தங்குடி வரை நடைபயணத்தை மேற்கொண்டார். வைகோவிற்கு ம.திமு.க தொண்டர்கள் கரகாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் , புலி ஆட்டம், தப்பாட்டம் பறை இசை மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைஞர்களுடன் வைகோ புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
உத்தங்குடி பகுதியில் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தி.மு.க கூட்டணி கட்சியில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் நடைபயணத்தில் பங்கேற்று ஆதரவினை தெரிவித்தனர். போதைப்பொருட்களால் அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று, நான் நடைபயணம் அறிவித்த பின்னர்தான், அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அதுபற்றி பேசினார்கள். அதுவரை அவர்கள் அதுபற்றி பேசவில்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.
கலை உலகில் இருந்து வருபவர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களை நான் விமர்சிக்கமாட்டோன். அரசியலுக்கு வந்து எளிதில் சாதித்து விடாலம் என்று மணல்கோட்டை கட்டுகிறார்கள். அது எப்போது வேண்டுமானாலும், சரிந்துவிழும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும். தி.மு.க தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து, ஸ்டாலின் முதலமைச்சராக தமிழகத்தை வழிநடத்துவார் என்றார்.
தொடர்ந்து பேசிய ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தலைவர் வைகோ தனது 82 வயதில், இதயமே எந்திரம் மூலம் இயங்கும் நிலையில் இந்த நடைபயணம் அறிவித்தார். இது வேண்டாம் என டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் அறிவுறுத்தியும் அதனை அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் ஒவ்வொரு வினாடியும் சிரமப்பட்டார். இந்த 11 நாட்களும் வைகோ ஒவ்வொரு வினாடியும் உடல் ரீதியாகக் கடும் வலியை அனுபவித்தார். மூச்சுத் திணறல் ஏற்படும் போதெல்லாம் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டு, மீண்டும் வைராக்கியத்துடன் நடந்து இந்தப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
திருச்சியில் தொடங்கி மதுரை வரை சுமார் 174 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்நடைபயணம், சாதி மத பேதங்களைக் கடந்து மனிதநேயம் தழைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்பட்டது. அத்துடன், இளைஞர்களிடையே பெருகி வரும் போதை கலாசாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வைகோ தனது முக்கிய இலக்காகக் கொண்டிருந்தார்.
தேர்தல் அரசியலுக்காக சில சமரசங்களை அவர் செய்திருக்கலாம். ஆனால், அவரின் சுயநலத்திற்காக எந்த ஒரு சமரசத்தையும் வைகோ மேற்கொண்டதில்லை. அவரின் தொண்டு, தியாகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. மறைந்த பிரதமர் வாஜ்பாய் போன்ற தலைவர்கள் வைகோவைச் சொந்த மகனைப் போல மதித்தனர். ஆனால், இன்றைய தமிழக பாஜக தலைவர்களான அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் போன்றோர் என்ன அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்? அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். 82 வயதில் ஒரு தலைவர் மக்களுக்காக வீதியில் இறங்கி நடக்கும்போது, அதைக் கொச்சைப்படுத்துவதுதான் நீங்கள் கற்றுக் கொடுக்கும் அரசியல் நாகரிகமா? உங்கள் அரசியல் வன்மத்தை அவரிடம் காட்டாதீர்கள். இது ஏற்புடையதல்ல என ஆவேசமாகப் பேசினார்.
