கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகளில் மதிமுகக்கு உடன்பாடு இல்லை என்றும், அமைச்சரவை பதவி கேட்டு ஒருபோதும் வலியுறுத்தியதில்லை என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மற்றும் மத மோதல்களைத் தடுப்பது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 ஆம் தேதி திருச்சியில் இருந்து சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார்.
இந்த நடைபயணம் தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்த நிலையில், அதன் நிறைவு விழா நாளை (ஜனவரி 12 ஆம் தேதி) மாலை மதுரையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இன்று (ஜனவரி 11 ஆம் தேதி) இரவு மதுரை உத்தங்குடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பல்வேறு அரசியல் மற்றும் சமகால விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
போதைப்பொருள் பிரச்சினை
இந்த நடைபயணத்திற்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். போதைப்பொருள் பிரச்சினை தமிழகத்தில் மிகப்பெரிய சமூக ஆபத்தாக மாறி வருவதாகவும், அதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த நடைபயணத்தை அறிவித்ததாகவும் வைகோ தெரிவித்தார்.
சாதித்து விடும் விஷயம் அல்ல
அரசியலுக்கு யாரும் வரலாம், கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் நபர்களுக்கும் உரிமை உண்டு என்றும் கூறிய வைகோ, ஆனால் அரசியல் என்பது எளிதில் சாதித்து விடக்கூடிய விஷயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் மணற்கோட்டைகள் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
திமுக வெற்றி பெறும்
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதியாக கூறினார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராக தமிழகத்தை வழிநடத்துவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனநாயகன் நம்பிக்கை
‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்களுக்கு முழு உரிமை உள்ளது என்றும், சென்சார் போர்டு எந்த காரணத்தால் தடை விதித்துள்ளது என்பதை அந்த அமைப்பே விளக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த தடை நீண்ட காலம் நீடிக்காது, படம் வெளியாவதில் எந்த பெரிய பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உடதேசம் எடுபடாது
மத்திய அரசையும், பாஜக தலைவர்களையும் விமர்சித்த வைகோ, அமித்ஷா தமிழகத்திற்கு வந்து உபதேசம் செய்வது எடுபடாது என்றும், திராவிட இயக்க மண்ணில் அது பலிக்காது என்றும் கூறினார். பிரதமர் மோடி தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி தமிழக மக்களை கவர முயல்கிறார் என்றாலும், தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டினார்.
உடன்பாடு இல்லை
திமுகவை அழிக்க நினைப்பவர்கள் கனவு காண்கிறார்கள் என்றும், இதைவிட கடுமையான சோதனைகளை திமுக கடந்துள்ளது என்றும் வைகோ கூறினார். திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் நோக்கில், சிந்தாந்த அடிப்படையில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகளில் மதிமுகக்கு உடன்பாடு இல்லை என்றும், அமைச்சரவை பதவி கேட்டு ஒருபோதும் வலியுறுத்தியதில்லை என்றும் அவர் கூறினார். திருச்சியில் தொடங்கிய இந்த சமத்துவ நடைபயணம், மதுரை ஓபுளா படித்துறை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.
