நூற்றாண்டு நாயகர் அண்ணன் இரா.நல்லகண்ணு நிறைவாழ்வுடன் வாழ்க!
வைகோ வாழ்த்து
நான் என்றைக்கும் மதிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அண்ணன் இரா.நல்லகண்ணு அவர்கள் இன்று நூற்றாண்டு நிறைவு காண்கிறார்! நாம் பெரிதும் மதிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்நாளில் நூற்றாண்டு நிறைவு பெறுவது கூடுதலான சிறப்பு ஆகும்.
இந்திய விடுதலைப் போராட்டம், விவசாயிகள் - தொழிலாளர்கள் ஆகியோர்களின் உரிமைப் போராட்டம் - தீண்டாமைக்கும், சாதி மதக் கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் - கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டம் - சமூக நீதிக்கான போராட்டம் என அவர் கண்ட களங்கள் பலப் பல!
அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடி, எண்ணற்ற கொடுமைகளை தியாக வடுக்களாகப் பெற்று, இலட்சிய உறுதியோடு இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கின்ற வீர வேங்கையான அண்ணன் இரா.நல்லகண்ணு அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் நிறை வாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து தமிழகத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்ற விழைவுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.12.2025
